நள்ளிரவில் அலறிய காடு.. 6 பேரிடம் சிக்கிய இளம்பெண்.. போலீசுக்கு பறந்த தகவல்.. என்ன ஆச்சு தெரியுமா?
ஜாஜ்மாவ் காவல்துறையினர் இரவே புகாரை பெற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தால் இளம்பெண்ணை இந்த கொடூரத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நடனமாட வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் உனாவ் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடன கலைஞர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பின் பேரில் மூன்று இளம்பெண்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் என கட்டணம் பேசப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி நேற்று மாலை கேக் வெட்டப்பட்டு அதன் பின்னர் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இறுதியாக உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னர் நடன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரவு சுமார் 9 மணிக்கு தொடங்கிய நடனம் 11 மணி வரை நடந்திருக்கிறது. இரண்டு மணி நேரம் மட்டுமே பேரம் பேசப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்திற்கு நடனம் ஆட வேண்டும் என்று இளம் பெண்களை விழா ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் பெண்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சையில் இளம்பெண் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

கடத்தல்
ஆனால் அவர் இரவு முழுவதும் காணவில்லை. சக தோழிகள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஜாஜ்மாவ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இப்புகாரை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க காணாமல் போன இளம்பெண் விடியற்காலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்திருக்கின்றன. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த தோழிகள் கோட்வாலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு பாலியல் பலாத்காரம்
அதாவது, நடனவிழாவில் ஏற்பட்ட சலசலப்பையடுத்து தான் வீட்டிற்கு கிளம்ப வெளியேறியதாகவும் இதனை கண்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் பின் தொடர்ந்து வந்து தன்னை காரில் கடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும், இவர்கள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் எனவும் எவ்வளவோ கெஞ்சியும் தன்னை விடாமல் இருந்துள்ளனர். மட்டுமல்லாது அனைவரும் மது போதையில் இருந்ததால் தன் மீது தாக்குதலையும் நடத்தினர் என இளம்பெண் கூறியுள்ளார். தாக்குதல் சம்பவத்தில் அப்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

வழக்குப்பதிவு
இரவு 11.30க்கு தொடங்கிய இந்த கொடூரம் அதிகாலை வரை அரங்கேறியுள்ளது. பின்னர் இப்பெண் மயங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஒருவழியாக காட்டுப்பகுதியிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பெண்ணை தோழிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இளம்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழா ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீதும் கடத்தல், பாலியல் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இதில் கொடுமை என்னவெனில் ஜாஜ்மாவ் காவல்துறையினர் இரவே புகாரை பெற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தால் இளம்பெண்ணை இந்த கொடூரத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எனவே தவறிழைத்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் குற்றாவளிகள் மீது உரிய நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று உனாவ் எஸ்பி சித்தார்த் மீனா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications