உத்தரப் பிரதேச மாநில வளர்ச்சியின் புதிய மைல்கல்.. வர்த்தக கண்காட்சியை பாராட்டிய குடியரசுத் தலைவர்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் தயாரிப்புகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக கிரேட்டர் நொய்டாவில் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி இம்மாநில வளர்ச்சியில் புதிய மைல்கல் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தயாரிப்புகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக கிரேட்டர் நொய்டாவில் வர்த்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். தற்போது இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி இக்கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்த கண்காட்சி இம்மாநில வளர்ச்சியில் புதிய மைல்கல் என பாராட்டியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "உத்திரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிறு குறு வணிகர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 2,000க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த கண்காட்சியில் பங்கேற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உத்தரப் பிரதேச முதல்வருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம். உ.பி. தனது பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராகக் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளது. இந்தியாவின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு உ.பி.யும் அதன் மக்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications