வேற லெவலில் மாறும் உ.பி உட்கட்டமைப்பு! இது லிஸ்டுலயே இல்லையே.. யோகி ஆதித்யநாத் புதிய அறிவிப்பு
உத்தரப் பிரதேசத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்திருக்கிறது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அடிப்படை கட்டமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு வரும் நிலையில், மாவட்டத்தின் தலைநகரங்களில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த புதிய திட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறை ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெற்றிகரமான நடத்திக்காட்டினார். அதன் பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உட்கட்டமைப்பு குறித்து சில முக்கிய அறிவிப்புகளை யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருந்தார். அதன்படி தேசிய தலைநகருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தைப்போல மாநில தலைநகருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, திட்டமிட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதாவது இது தொடர்பாக அவர் கூறியதாவது, "லக்னோ இன்று மிகப்பெரிய மெட்ரோபாலிடன் நகரமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து வசிக்க விரும்புகிறார்கள். லக்னோவை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்த புகார்களும் அதிகம் வருகின்றன. இந்நிலையில் மாநில தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்வது பொருத்தமானதாக இருக்கும். இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பான செயல் திட்டத்தை தயார் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளை கேட்டிருக்கிறேன்.
ஏற்கெனவே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்களின் தேவை என்ன என்பது குறித்து அவர்களிடமே நேரடியாக பேசி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக நகரங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய திட்டத்தையும் அவர் அறிவித்திருக்கிறார். அதன்படி இனி ஒவ்வொரு நகரங்களிலும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தின் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும். தெரு நாய்கள் மூலம் ஏராளமான சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது.
இது போன்று ஒவ்வொரு சின்னஞ்சிறிய விஷயங்களிலும் உத்தரப் பிரதேச அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் இப்போது நாங்கள் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் அடுத்த 50 ஆண்டுகளை கணக்கில் கொண்டதாக இருக்கும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். இந்த மாற்றங்கள் குறித்து அண்டை மாநிலங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications