அயோத்தி உலக சாதனையில் துயரம்.. உபி உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய வீடியோ! கலங்க வைத்த குழந்தைகள்
லக்னோ: அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வில் உத்தரப்பிரதேசத்தின் உண்மை முகம் அம்பலமாகி இருக்கிறது. என்ன அது? விரிவாக பார்ப்போம்.
யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்கு முந்தைய நாளான நேற்று கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி அயோத்தியில் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ஆன்மீக நகரமான அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தீபோத்சவ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அயோத்தி முழுவதும் சுமார் 24 லட்சம் விளக்குகளை ஏற்றுவதற்கு 25 ஆயிரம் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டனர். விளக்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த தீப உட்சவ நிகழ்வின் முக்கிய பகுதியாக ஷோபா யாத்திரையை அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமாயணத்தில் உள்ள ராமரின் கதைகள் உட்பட பல்வேறு சமூக ஆன்மீக கருத்துக்களை கொண்ட 18 அலங்கார அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

அயோத்தி உதயா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக ராம் கதா பூங்காவில் முடிந்தது. இதில் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ராமர், அவரது மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் புஷ்பக விமானத்தில் 14 ஆண்டுகால வனவாசத்துக்கு பிறகு அயோத்தி திரும்பியதை சித்தரிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட தேர் இழுக்கப்பட்டது.
Latest visuals from Ram Rajya pic.twitter.com/eB8SoejmX9
— The Dalit Voice (@ambedkariteIND) November 11, 2023
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல், அமைச்சர்கள் ஜெய்வீர் சிங், ராகேஷ் சச்சன், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா என பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. ட்ரோன் கேமராவில் பதிவான இதன் காட்சிகள் பலரை ரசிக்க வைத்தன. அதே நேரம் அந்த சாதனை நிகழ்வின்போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் உத்தரப்பிரதேசத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டி உள்ளன.

ஆம், சாதனைக்காக ஏற்றப்பட்டு அழகாக எரிந்துகொண்டு இருக்கும் அகழ் விளக்குகளில் ஊற்றப்பட்டு உள்ள எண்ணெய்யை ஏழை குழந்தைகள் பாட்டிலில் ஊற்றிச் செல்லும் காட்சி அது. அப்போது அங்கு வந்த போலீசார் அந்த குழந்தைகளின் எண்ணெய் எடுக்கக்கூடாது என்று எச்சரித்தனர். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் அரசாங்கம் 22.5 லட்சம் அகழ் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்கும் அதே நேரம், அதை கண்டு ரசிக்க கூட நேரமின்றி அதில் உள்ள எண்ணெய்யை எடுத்து வாழ்வாதாரத்தை நடத்தும் நிலைக்கு ஏழை குழந்தைகள் தள்ளப்பட்டு உள்ளதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications