பெண் குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க.. பலாத்காரத்திற்கு வழிவகுக்கும்.. பெண் அதிகாரிக சர்ச்சை பேச்சு
லக்னோ: பெண் குழந்தைகளுக்கு செல்போனை வாங்கித் தரக் கூடாது, அப்படி மீறி வாங்கிக் கொடுத்தால் அதுவே அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய வழிவகுக்கும் என பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் மீனாகுமாரி விசாரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், பெண் குழந்தைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மணிக்கணக்கில் ஆண்களுடன் பேசுவார்கள். பின்னர் இருவரும் எங்காவது ஓடி விடுவார்கள். அவர்கள் வைத்திருக்கும் போன்களை பெற்றோர் சோதனை செய்வதே இல்லை. இவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவதே இல்லை.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்க இந்த சமூகமும் ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளை கண்காணிக்கும் மிகப் பெரிய பொறுப்பு தாய்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் பொறுப்பில்லாமல் இருந்தால் அவர்களது தாய்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். குற்றங்களுக்கு பெண்களையே குற்றம் சுமத்துவது போன்ற இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.