உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 59 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வம்!
லக்னோ: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 3-வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
Recommended Video

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 59 தொகுதிகளில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் இன்று உத்தர பிரதேசத்தில் வாக்களிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து 16 மாவட்டங்களில் உள்ள மேலும் 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது.
ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மைன்புரி, ஃபரூகாபாத், கன்னோஜ், எட்டாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர் மற்றும் மஹோபா ஆகிய மாவட்டங்களில் இன்று உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.
இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது.
இங்கு பாஜக சார்பாக மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் அகிலேஷ் யாதவின் உறவினர் சிவ்பால் சிங் யாதவ் போட்டியிடும் ஜாஸ்ஸ்வந்த்நகர் தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்க உள்ளது.இது அகிலேஷ் யாதவ் சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடும் முதல் தேர்தல் ஆகும். கர்ஹால் தொகுதியில் கடந்த 20 வருடமாக சமாஜ்வாதி தோல்வி அடைந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் 2017 தேர்தலில் 49 இடங்களில் பாஜக வென்றது. இங்கு மொத்தம் 8 இடங்களில் சமாஜ்வாதி வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இது பாஜக வலிமையாக இருக்கும் தொகுதியாகும்.
உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 117 இடங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இன்று 59 இடங்களில் தேர்தலில் தேர்தல் நடக்கும் நிலையில் மீதம் உள்ள 117 இடங்களில் அடுத்த கட்டங்களில் தேர்தல் நடக்கும்.












Click it and Unblock the Notifications