உ.பி தேர்தல்.. இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதை மூடி மறைக்கிறாரா அகிலேஷ்? என்ன நடக்கிறது?
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இஸ்லாமிய வேட்பாளர்கள் சிலரை நிறுத்தி வருகிறது. ஆனால் இவர்களின் பெயர்களை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வெளியிட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. இந்த நிலையில் உத்தர பிரதேச தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளன.
பாஜக முஸ்லீம்
இதில் பாஜக 95 வேட்பாளர்களின் பொறளை முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜக சார்பாக ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று அப்னா தளம் சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சவுர் தொகுதியில் இருந்து ஹைதர் அலி கான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இவர்தான் 2014க்கு பிறகு இத்தனை வருடம் கழித்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் இஸ்லாமிய வேட்பாளர் ஆவார். அப்னா தளம் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லீம் வேட்பாளர்
எனவே ஹைதர் அலி கான்தான் இந்த வருடம் பாஜக கூட்டணியின் முதல் முஸ்லீம் வேட்பாளர். பாஜக இந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை இனியும் தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. அப்னா தளம் நிறுத்தி இருக்கும் ஹைதர் அலியும் கூட கடந்த வாரம் வரை காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். கடந்த வாரம் இவர் காங்கிரஸ் சார்பாக சவுர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் திடீரென வேட்பாளர் அறிவிப்பிற்கு பின் காங்கிரசில் இருந்து வெளியேறி சவுர் அப்னா தளத்தில் சேர்ந்துள்ளார்.
சமாஜ் வாதி
ஒரு பக்கம் முஸ்லீம் வேட்பாளர்களை அறிவிக்காமல் பாஜக புறக்கணித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சமாஜ்வாதி கட்சி ரகசியமாக முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதாவது தாங்கள் முஸ்லீம் வேட்பாளர்களை அறிவிப்பது இந்துக்களுக்கு தெரிந்து விட கூடாது என்பது போல மிகவும் ரகசியமாக முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்காக 13 முஸ்லீம் வேட்பாளர்களை சமாஜ்வாதி அறிவித்தது. இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட தேர்தல்
அதே சமயம் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக 10 முஸ்லீம் வேட்பாளர்களை சமாஜ்வாதி அறிவித்தது. ஆனால் இந்த இஸ்லாமிய வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பொதுவாக ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது என்றால் அக்கட்சியின் சமூக வலைதள பக்கத்திலும், டிவியிலும் கட்சி அறிக்கை பெயர்களோடு வெளியாகும். ஆனால் இந்த இஸ்லாமிய வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டும் சமாஜ்வாதி கட்சி வெளியிடவே இல்லை.
ரகசியம்
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய வேட்பாளர்களின் குற்ற பின்னணி உள்ளிட்ட விவரங்களை சமாஜ்வாதி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துவிட்டது. ஆனால் இவர்களின் பெயர்களை வெளிப்படையாக கட்சி சார்பாக வெளியிடவில்லை. மாறாக அவர்களின் தொகுதிகளில் மட்டும் இவர்தான் உங்கள் சமாஜ்வாதி வேட்பாளர் என்று கூறி பிரச்சாரங்களை செய்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி இப்படி சீக்ரெட்டாக இஸ்லாமிய வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது பல கேள்விகளை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.
ஏன் இப்படி
அதாவது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இந்த விவரங்களும் இருக்கிறது. ஆனால் இதை சமூக வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ சமாஜ்வாதி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பதே புகாராக உள்ளது. உத்தர பிரதேசத்தில் இந்துக்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதால் சமாஜ் வாதி இஸ்லாமிய வேட்பாளர்களின் பெயர்களை வெளிப்படையாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இஸ்லாம் - இந்து வாக்குகள்
இந்துக்களின் வாக்குகளை இழக்க கூடாது என்றுதான் ஒரு பக்கம் பாஜக முஸ்லீம் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது பாஜகவின் பாணியை சமாஜ்வாதியும் பின்பற்றுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ சமாஜ் வாதியை சேர்ந்த இந்த முஸ்லீம் வேட்பாளர்களின் பெயர்களை தனியாக வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். இவர்களின் பெயர்களை தேர்தல் பிரச்சாரத்தில் தனியாக படித்து காட்டி விமர்சனம் செய்து வருகிறது. இவர்கள் எல்லாம் குற்றப்பின்னணி கொண்டவர்கள். இவர்களுக்கு சமாஜ்வாதி சைலண்டாக ஆதரவு அளித்துள்ளது என்று கூறி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்துள்ளார்.