நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க புது யோசனை! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நீர் நிலைகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நீர் நிலைகளில் மூழ்கியவர்களை காப்பாற்ற சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களை யோகி ஆதித்யநாத் அரசு நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

அதாவது, உத்தரப் பிரதேசத்தில் நீர் நிலைகளில் சமீப காலமாக அதிகமான அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களை மாநில அரசு நியமித்துள்ளது. வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கிய பகுதிகளை அடையாளம் காண்பது, நீரில் மூழ்கியவர்களை உடனடியாக மீட்பது போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்வார்கள். இவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சி பெறுவார்கள். இப்படியாக பயிற்சி முடித்த 120 வீரர்கள் உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நீர் நிலைகளில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் ஏற்படும் 20% உயிரிழப்பை குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இதற்கு முன்னர் இப்படியான முயற்சிகள் மேற்கொண்டதில்லை. ஆனால் சமீப காலங்களாக மழை, வெள்ளம் அதிகரித்திருப்பதால் உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போதும் குறிப்பிடத்தக்க அளவில் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன.
இதை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி நல்ல பலனை கொடுக்கும். எங்கள் நோக்கம் எதிர் வரும் மழைக்காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 20 சதவிகிதத்தை குறைப்பதுதான்" என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications