மாணவி ஆஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு... இஸ்லாமிய வெறுப்பின் உச்சம் - கொந்தளிக்கும் திருமாவளவன்
லக்னோ: நபிகள் நாயகம் குறித்த பாஜக செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டன.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது.

போராட்டம்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

வீடுகள் இடிப்பு
இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ட்விட்டர் கணக்கில், புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்தநாள் சனிக்கிழமை வரும் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் சஹாரன்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேரை கைது செய்த போலீசார், முஜம்மில் மற்றும் அப்துல் வகீர் ஆகியோரின் வீட்டு சென்று புல்டோசரை கொண்டு இடித்தனர்.

ஆஃப்ரின் பாத்திமா
அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப்பிரதேச அரசு இடித்து தள்ளியது. அத்துடன் வன்முறைக்கு காரணமானவர்கள் என்று கூறி ஆஃப்ரின் பாத்திமா, அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரையும் உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்ரின் பாத்திமாவுக்கு ஆதரவாக #StandWithAfreenFathima என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

திருமாவளவன் கண்டனம்
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் #StandWithAfreenFathima என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். "நுபுர்சர்மாவைக் கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் அஃப்ரீன் ஃபாத்திமா முன்னின்று செயல்பட்டாரென அவரது வீட்டை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் இடித்துத் தள்ளியுள்ளது ஃபாசிச பாஜக யோகி அரசு. இஸ்லாமிய வெறுப்பின் உச்சமான இந்த அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என கண்டித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications