மீண்டும் அமேதியில் களமிறங்கும் ராகுல் காந்தி! ஆஹா விஷயம் அப்படி போகுதா.. காங்கிரஸ் பிளான் என்ன
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் வேட்பாளர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில், அங்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. அங்குக் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 17 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், நேரு குடும்பத்தினர் வழக்கமாகப் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற தகவல் பரவி வருகிறது.
அமேதி: மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி முடிந்தால் அமேதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று ராகுல் காந்திக்குத் தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் இன்னும் அமேதி தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஸ்மிருதி இரானி உடனான மோதலை ராகுல் காந்தி தவிர்க்கிறாரா அல்லது போட்டியிடுவாரா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
காங்கிரஸின் இது குறித்து வெளிப்படையாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் அமேதியில் போட்டியிட வாய்ப்பு மிக அதிகம் என்றே சொல்லப்படுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி வயநாட்டில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதன் பின்னரே அமேதிக்கான வேட்பாளரைக் காங்கிரஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேதி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மே 3ஆம் தேதி வரை கடைசி தேதி இருக்கும் நிலையில், காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டையே எடுக்கும் எனத் தெரிகிறது.
பதில் என்ன: கேரளாவில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கேரளாவில் இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், ராகுல் காந்தி அங்குப் போட்டியிடுவது காங்கிரசுக்கு சாதகமாக அமையும். இதன் மூலம், கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் போலவே கேரளாவில் மிகப் பெரிய பெற்றியைப் பெற முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
பிளான் என்ன: வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் முடிந்த உடன் அமேதியில் உள்ள காங்கிரஸ் முகாம் தனது வேலையைத் தொடங்கியது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பூத் அளவிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் அங்கு இப்போது காங்கிரஸ் பார்த்து பார்த்துச் செய்து வருகிறது. சுமார் 8680 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அமேதியின் 876 கிராமங்களில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. வீடு வீடாகச் சென்று நடக்கும் பிரச்சாரங்களும் மக்கள் ஆதரவை அதிகரிக்கும்.
முன்னதாக, அமேதி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. அதற்கு அமேதியில் காங்கிரஸ் தொண்டர்களே அதிருப்தி தெரிவித்தனர். ராகுல் காந்தியைத் தவிர வேறு எந்தவொரு வேட்பாளர் போட்டியிடக்கூடாது என்பதே அவர்கள் கருத்து. வேறு வேட்பாளர் களமிறங்கினால் அது உட்கட்சியிலேயே பூசலை கிளப்பும் என்பதே அவர்கள் கருத்தாகும்.
வெல்ல வாய்ப்பு இருக்கா: அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதையே காங்கிரஸின் உள்கட்சி சர்வே காட்டுகின்றன. ஸ்மிருதி ரானி மீது மக்கள் அதிருப்தியாக இருப்பதால் காங்கிரஸ் இங்கு வெல்ல 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது என்பதே உட்கட்சி சர்வேயில் தெரிய வந்ததாகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு அங்கு ஒரு நல்ல லீடு இருக்கும் என்ற போதிலும் வயநாட்டில் வாக்குப்பதிவு முடியும் வரை காங்கிரஸ் அமேதிக்கான வேட்பாளரை அறிவிக்கப் போவது இல்லை. ஆனால், அதன் பிற அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
2019 அமேதி தேர்தல்: கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பாஜகவில் இருந்து ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் 4.68 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வென்று காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications