தாஜ் மஹால் உள்ள இடத்தில்.. விரைவில் ராமர் கோயில் வரும்... பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
லன்கோ: ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹாலின் பெயரை விரைவில் யோகி அரசு ராம் மஹால் என்றோ சிவன் மஹால் என்றோ மாற்றப்படும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்று தாஜ் மஹால். உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள இந்த தாஜ் மஹாலை பார்க்க உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவது வழக்கம்.
இருப்பினும், உத்தரப் பிரதேத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பலரும் தொடர்ந்து தாஜ் மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.

சிவன் கோயில்
இந்நிலையில் பைரியா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர், சுரேந்திர சிங், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் தாஜ் மஹால் இருந்த இடத்தில் இந்து கோயில் ஒன்று இருந்ததாகவும் அதை இஸ்லாமிய மன்னர்கள் இடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்

சிவன் மஹால்
இது குறித்து சுரேந்திர சிங் கூறுகையில், "கடவுள் அருளால் விரைவில் தாஜ்மஹால் பெயர் ராம் மஹால் என்றோ அல்லது சிவன் மஹால் என்றோ பெயர் மாற்றப்பட்டுள்ள செய்தி உங்களுக்கு வரும். இந்தியக் கலாச்சாரத்தை அழிக்க இஸ்லாமியர்கள் எல்லா வழிகளையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தினர். ஆனால் இப்போது சிவாஜி வம்சாவளியின் வந்த ஒருவரின் பொற்காலம் இங்கு நடக்கிறது.

யோகி அரசு
தாஜ்மஹால் விரைவில் மாற்றப்படும். முன்பு இது ஒரு சிவன் கோயிலாக இருந்தது. எனவே தாஜ்மஹால் மீண்டும் ஒரு தேசிய பாரம்பரியமாகச் சின்னமாகவும் ராமர் கோயிலாகவும் மாறும். ராமர் கோயிலாக மாற்றப்பட்டால் அதன் பெயர் மாற்றப்படும். யோகி ஆதித்யநாத் அரசே இந்த மாற்றத்திற்கு வித்திடும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சை எம்எல்ஏ
சுரேந்திர சிங் இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறை அல்ல. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை அமைத்தது முதல் சுரேந்திர சிங் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாஜ் மஹால் பெயரை ராம் மஹால் அல்லது கிருஷ்ணா மஹால் என மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரண்மனை பெயரை ஜானகி அரண்மனை என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications