டீசல் பம்புகளுக்கு மாற்றாக சோலார் பம்புகள்! அடியோடு மாறும் உத்தரப் பிரதேசம்! யோகி ஆதித்யநாத் அதிரடி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்பு வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மின்சார வாகனங்களில் எண்ணிக்கையை உயர்த்த அம்மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் வாகனங்களை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகும். முதல் விஷயம் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது மாநிலத்தின் மாசுவை பாதியாக குறைக்கும். உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மட்டுமல்லாது வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். எனவே இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதன் காரணத்தினால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இனி உலகமே மின்சார வாகனங்களை நோக்கிதான் நகரும். அதற்கான முதற்படியில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
அதேபோல வேளாண் துறையிலும் டீசல் என்ஜினுக்கு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. வெறுமென அறிவுறுத்தலோடு நின்றுவிடாமல், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார்களை மானிய விலையில் கொடுக்க முன்வந்திருக்கிறது. இது மாநிலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications