இலக்கை அடைய அனைத்தும் தயார்! 1 டிரில்லயன் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நகரும் உ.பி.. யோகி உறுதி
லக்னோ: அடுத்த 4 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் யோகி அரசு அவ்வப்போது சில அதிரடி திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், MSME தொழில் நிறுவனங்களுக்கான முதலமைச்சரின் குறுந்தொழில் முனைவோர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய அளவில் MSME தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் உ.பியும் ஒன்று. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் என்கிற அளவில் உயர்த்துவதை யோகி அரசு இலக்காக வைத்திருக்கும் நிலையில், அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த MSME தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்திற்கு இந்த திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும். தொழில் நிறுவனர் விபத்தில் உயிரிழந்துவிட்டால் அதற்காக ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். ஆனாலும் இதற்காக சில வரைமுறைகள் உண்டு. அதற்குள் பொருந்தும் தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும்.
தொழில் முனைவோர்கள், அவர்களுக்கென பதிவு செய்யப்பட்டுள்ள போர்ட்டலில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இந்த இழப்பீட்டிற்கு 18 வயது முதல் 60 வயது வரை யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதில், ஜிஎஸ்டி துறையால் நடத்தப்படும் வணிகர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற தகுதியில்லாத குறுந்தொழில் முனைவோர் சேர்க்கப்படுவர். லக்னோவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.34 லட்சம் கோடி வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications