உத்தரப் பிரதேசம்.. இப்போ வேற லெவல்! பாஜகவின் 6 ஆண்டுகால ஆட்சி.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: கடந்த 6 ஆண்டு காலத்தில் உத்தரப் பிரதேசம் மாஃபியாக்களின் கூடாரம் என்கிற நிலையிலிருந்து வளர்ச்சியின் மாநிலம் என்கிற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த பலர் யோகி ஆதித்யநாத்தை விட கூடுதல் ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்ததில்லை. அந்த வரிசையில் யோகி ஆதித்யநாத் சாதனை படைத்திருக்கிறார்.

இதைத்தான் பாஜகவினரும், அம்மாநில அரசும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "இந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலத்தின் சுயமரியாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் உத்தரப் பிரதேசத்திலிருந்து வருகிறோம் என்று சொன்னால் நம்மை சந்தேக கண்களோடுதான் சக மாநிலத்து மக்கள் பார்ப்பார்கள். ஆனால், இன்று இந்நிலைமை மாறி நம்மை மரியாதையாக நடத்துகிறார்கள். இதற்கு காரணம் டபுள் என்ஜின் அரசுதான்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாநிலம் மாஃபியா மற்றும் குண்டர்களின் பிடியில் இருந்தது. ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு பெரும் குற்றம் சம்பவம் நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இந்நிலையை ஒழித்துக்கட்டியது. மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ளதோடு நின்றுவிடாமல் அதை நாங்கள் செயல்படுத்தியும் இருக்கிறோம். மாற்றம் பாஜக ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது. இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுக்க 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்தில் இளைஞர்களை திறமையானவர்களாக மாற்ற மேலும் சில திட்டங்களை நாங்கள் அறிவித்திருக்கிறோம். இந்த திட்டங்களின் படி ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் நவீன தொழில்நுட்ப அறிவை பெறுவார்கள். அதேபோல எல்லா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் அரசு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன். சமீபத்தில் கூட 1.64 லட்சம் காவலர்கள் ஆட்சேர்ப்பு பணி நடைபெற்றது. இது அனைத்தும் வெளிப்படையாக நடைபெற்றது என்பதுதான் இந்த யோகி ஆதித்யநாத் அரசின் சாதனையாகும். எனது அரசாங்கத்தில் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றிற்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் ஏழைகள், சாமானியர்கள், பெண்கள், உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக மிக முக்கிய பணி ஒன்ற நடைபெற்று வருகிறது. அதாவது மேற்கு உத்தரப் பிரதேசத்தை மத்திய மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்துடன் இணைக்க 'கங்கா எக்ஸ்பிரஸ்வே' எனும் திட்டம் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிக்கப்பட்டால் உத்தரப் பிரதேசம் வேற லெவலில் சென்றுவிடும். அதேபோல தற்போது வரை மாநிலத்தின் 5 பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆக்ராவில் முதல் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்ற கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications