சைபர் குற்றங்களை தடுப்பதில் உ.பி போலீஸ் முதலிடம்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: சைபர் குற்றங்களுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட எடுக்கப்பட்ட முடிவு சிறந்த பலனை அளித்திருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை அம்மாநில பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் யாரும் இம்மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வரை நீடித்ததில்லை. எனவே இந்த சாதனையை யோகி ஆதித்தயநாத் முறியடித்துள்ளார். இதனையடுத்து இதனை கொண்டாடும் விதமாக புதிய திட்டங்களை மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் யோகி அதித்தயநாத் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்த யோகி ஆதித்யநாத் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார். அதாவது,
"மாநிலம் முழுதுவதும் திடீரென கலவரங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சோஷியல் மீடியாக்கள்தான். இதன் மூலமாகதான் வதந்திகள், போலியான வீடியோக்கள் ஆகியவை பரப்பப்படுகின்றன. மட்டுமல்லாது இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதும் சவாலானதாக இருக்கிறது. இப்படியான சைபர் குற்றங்களை தடுக்க மாநில அரசு தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையில் இதற்கென சிறப்பாக பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது சைபர் குற்றங்களை தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இதற்கென தனியாக 'டெஸ்க்' ஒதுக்கப்படும். இதன் மூலம் குற்றங்கள் எளிதில் கட்டுப்படுத்தப்படும். அதேபோல இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் அவர் வேறு எந்த வழியில் தவறு செய்தாலும் அது எளிதில் கண்டுபிடிக்கப்படும்.
மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெறும் 2 சைபர் காவல் நிலையங்கள்தான் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. பொதுவாக குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவது உத்தரப் பிரதேச அரசின் தனிச்சிறப்பம்சம். இது இனி சைபர் குற்றங்களுக்கும் பொருந்தும். சைபர் குற்றங்களை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட எடுக்கப்பட்ட முடிவு சிறந்த பலனை அளித்திருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்"












Click it and Unblock the Notifications