மாஸ்.. துப்பாக்கி பிடித்த கைகளில் டேப்லெட்களை தந்தது பாஜகதான்.. உத்தரப்பிரதேச முதல்வர் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முன்னர் இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் திரிந்துக்கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்போது டேப்லட்கள் உடன் கல்வியை தொடர்வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 4 மற்றும் 11ம் தேதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக யோகி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மதுரா, ஃபிரோசாபாத் மற்றும் ஆக்ராவில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற யோகி அதித்யநாத், "மாநிலத்தில் முன்பு இளைஞர்கள் துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது கல்வியின் பக்கம் அவர்களது கவனம் திரும்பியுள்ளது. இதற்கு மாநில அரசின் முயற்சிகள்தான் காரணம்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, "உத்தரப் பிரதேசம் இந்தியாவின் ஆன்மீக தலங்கள் நிறைந்த மாநிலமாகும். இங்குள்ள மதுரா நகரின் பெருமை அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். இப்படி இருக்கையில் இந்த நகரை அவமதிக்கும் விதமாக நகரின் பல்வேறு இடங்களில் மது மற்றும் இறைச்சி விற்பனை கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு பாஜக பொறுப்பேற்ற பின்னர் இதற்கு ஒரு முடிவு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை மதுராவில் பால் பொருட்கள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏனெனில் மதுரா பால் நதிக்கு பெயர் பெற்றது. இருப்பினும் விதி விலக்காக சில இடங்களில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுபானங்களும் ரகசியமாக இயங்கி வருகிறது. இந்த கடைகளை நடத்தி வருபவர்கள் அனைவரும் விரைவில் இந்த வியாபாரத்தை கைவிட்டு விட்டு பால் பொருட்களை விற்பனையாளராக மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசு யாருக்கும் பாரபட்சம் காட்டாது. கடந்த 2017க்கு முன்னர் இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளுடன் திரிந்துக்கொண்டிருந்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பு வந்த பின்னர் இந்த நிலைமை மாறியுள்ளது.
இந்த அரசு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு டேப்லெட்களை வழங்கியுள்ளது. இது இளைஞர்களின் கவனத்தை கல்வியை நோக்கி திருப்பியுள்ளது. எனவே புதிய விஷயங்களை அவர்கள் தேட தொடங்கியுள்ளனர். இதுதான் பாஜக அரசின் சாதனை. உத்தரப் பிரதேசம் தற்போது டபுள் என்ஜின் அரசாங்கத்தின் கீழ் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. அதேபோல மேலும் சிறப்பான வளர்ச்சியை பெற டிரிபிள் என்ஜின் அரசை உருவாக்க வேண்டும். அதற்கு உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் பாஜகவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
யோசித்து பாருங்கள் 2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்கள் குப்பை நகரங்களாக இருந்தன. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலையை தலைக்கீழாக மாற்றினோம். இன்று உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாறியுள்ளன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications