பாஜக மட்டுமே ஏழைகளின் குரல்களை கேட்கிறது! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: பாஜக அரசு மட்டுமே ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்கிறது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு வெளிப்படைத்தன்மையோடு இயங்குவதால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைகிறார்கள் என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், பாஜக அரசு மட்டுமே ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்கிறது என்று கூறியுள்ளார். பல மாநிலங்களில் மத்திய அரசுடன் இணக்கம் இருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், உத்தரப் பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். மஹந்த் திக்விஜய்நாத் பூங்காவில் கடந்த சனிக்கிழமை 1500 ஏழை எளிய ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணங்களை நடத்தி வைத்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த திட்டத்தின் மூலம் வரதட்சணை கொடுமைகளை ஒழித்துவிட முடியும். பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்காக ஏராளமான கடனை பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத வகையில் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன. ஆனால் இந்த திட்டம் ஏழைகளை திருமண செலவிலிருந்து காப்பாற்றும். பாஜக அரசு மட்டுமே ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்கிறது. அதனால்தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications