சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள்! அதிகாரிகளை எச்சரித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாமானிய மக்களின் குறைகள் கவனமாக கேட்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை யோகி ஆதித்யநாத் தினமும் தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு முடிவுற்றிருக்கிறது என்பது குறித்தும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அது அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த உடன் உடனடியாக சரி செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் சுமார் 24 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 762 மாநகராட்சிகள் உள்ளன. இவ்வாறு இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் அரசின் கடமையாகும். இதற்காக ஏற்கெனவே ரூ.8,731 கோடி மதிப்பில் 2,029 வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 7 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. 17 மாநகராட்சியை மேலும் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் மதிப்பு ரூ.8,731 கோடி. இது பெரிய தொகையாக இருந்தாலும், பாஜக அரசின் பல திட்டங்களில் இது ஒரு சிறிய எண்ணிக்கை மட்டுமே. இந்த தொகை ஒரு மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம். இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டதற்கான காரணம் வளர்ச்சி மட்டும்தான்.
இந்த வளர்ச்சி பாதையில் தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாமானிய மக்களின் குறைகள் கவனமாக கேட்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications