திறன் மேம்பாட்டில் அசத்திய உத்தரப் பிரதேச இளைஞர்கள்.. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் நல்ல பலனளித்துள்ளன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் நல்ல பலனை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறையை மேம்படுத்த மத்திய அரசு, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி ஒதக்கி வருகிறது. கடந்த முறை உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.503 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தவிர மாநில அரசு இளைஞர்களின் திறனை மேம்படுத்த தனியாக சில திட்டங்களை உருவாக்கி அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தனர். இப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 21 வீரர்கள் பதக்கங்களை வென்றனர். இது குறிப்பிட்டு பேசிய யோகி ஆதித்யநாத், "இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் நல்ல பலனளித்துள்ளன" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பதி விஹார் காலனியில் ரூ.6.18 கோடி செலவில் மினி விளையாட்டு மைதானம் விரைவில் அமைய இருக்கிறது. இதற்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த பகுதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். சண்டையும் சர்ச்சையும் நிறைந்த எப்போதும் பதட்டமான பகுதியில் இதுவும் ஒன்று.
ஆனால், தற்போது இந்நிலைமை மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாங்கள் விளையாட்டு மைதானங்களை கட்டி வருகிறோம். இது இளைஞர்களை விளையாட்டு நோக்கி நகர்த்துகிறது. இன்று 72 கோடி மதிப்பிலான 42 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இது தவிர நகரில் 6 இடங்களில் திருமண மண்டபங்களை கட்ட உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். திருமண மண்டபங்கள் இன்றைக்கு ஏழை மக்களின் கனவாக இருக்கிறது. இதனை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications