மதுரையில் அதிர்ச்சி.. அடகு கடையில் 1400 சவரன் நகை, ரூ. 9 லட்சம் கொள்ளை
மதுரை: மதுரையில் நரிமேட்டில் அடகு கடையில் பூட்டை உடைத்து 1400 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நரிமேடு கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் வீட்டிலேயே தனலட்சுமி அடகு கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளாக நடத்தி வரும் இவரது கடை அப்பகுதியில் பிரபலம் என்பதால் சுற்றுப்புற பகுதி மக்கள் இவரது கடையில் வந்து அடகு வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டு வீட்டில் தூங்க சென்றார் கோபிநாத். இதையடுத்து காலை கடையை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கேஸ் சிலிண்டர் கட்டிங் இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 1400 சவரன் நகைகள் கொள்ளை போயின. பின்னர் 9 லட்சம் ரொக்கமும் கொள்ளை போனது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 1400 பவுன் அதிகம் என்பதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ரசீதுகளை காண்பித்தவுடன் போலீஸார் நம்பி விசாரணையில் இறங்கினர்.
அப்போது அங்கிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது அதிகாலை 2.30 மணிக்கு இருநபர்கள் கடைக்கு அருகே வந்து அங்கிருந்த சிசிடிவியை சேதப்படுத்தினர். இந்த காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.