மதுரை தனியார் மழலையர் பள்ளியில்.. திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு
மதுரை: மதுரை அருகே தனியார் மழலையர் பள்ளியில், 4 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சக பெண் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கியுள்ளது. தனியார் மழலையர் பள்ளியின் அஜாக்கிரதையே இதற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை கேகே நகர் அருகே உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சக பெண் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

4 வயது சிறுமி உயிரிழப்பு
அரை மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு ஒரு மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். தனியார் மழலையர் பள்ளியின் அஜாக்கிரதையே இதற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கேகே நகர், அண்ணா நகர் பகுதிகளில் பல தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர்கார்டன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடைக்காலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி பள்ளி நடந்துள்ளது.
11 ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி
சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று பள்ளியில் இருந்துள்ளனர். 5 பெண் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளியில் 4 வயது சிறுமி ஆருத்ரா என்ற சக சிறுமிகளோடு விளையாடிக்கொண்டிருந்துள்ளாள். அப்போது அங்கு 11 அடி ஆழம் கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி இருந்துள்ளது.
அந்த தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி திறந்து இருந்துள்ளது. இதனை கவனித்த சிறுமி ஆருத்ரா அந்த தொட்டியை எட்டி பார்த்தபோது தவறுதலாக உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை யாரும் பார்க்கவிலை என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் அந்த குழந்தை தண்ணீரில் தத்தளித்ததாகவும், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தான் குழந்தையை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
4 ஆசிரியர்கள், உரிமையாளர் கைது
இதையடுத்து குழந்தை ஆருத்ரா உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தைக்கு ஒரு மணி நேரம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆருத்ரா உயிரிழந்தாள். இதைக் கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக அறிந்ததும் மதுரை மாநகர போலீசார் பள்ளியில் வந்து விசாரணை நடத்தினர். மாநகர துணை ஆணையர் அனிதா பள்ளி ஆசிரியர்கள் மற்றும், நிர்வாகியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து குழந்தை உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் இருந்த 4 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் கோரிக்கை
இதேபோல் பள்ளி உரிமையாளர் திவ்யா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரும் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவம் நடந்ததை அறிந்து வந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்குவந்து தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர்.
மாவட்ட நிர்வாகம் அடிக்கடி பள்ளிகளில் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications