ரயில் நிலையங்களில் காட்சிப்பொருளாகும் ஸ்கேன் மெஷின்.. அலட்சியத்தால் பலியான உயிர்கள்.. யார் பொறுப்பு?
மதுரை: ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சிலிண்டர் கொண்டு போய் சமைக்கும் அளவிற்கு அலட்சியமாக நடந்து கொண்டதால் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன. ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை ஸ்கேன் செய்யும் மெஷின் காட்சிப்பொருளாக உள்ளதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக வந்த ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் உடல் கருகி பலர் பலியாகியுள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வரை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்ப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
ரயில் பெட்டிக்குள் டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பரபரப்பான மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மதுரை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு காரணம் ரயில்வே காவல்நிலைய காவலர்களின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் பயணிகளின் அலட்சியமே என்று ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சுற்றுலா ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பின்னரே பெட்டிகளில் ஏற அனுமதிக்க வேண்டும். ஆனால் ரயில் நிலையங்களில் உள்ள ஸ்கேனர் கருவிகள் தற்போது காட்சிப்பொருளாகவே உள்ளது.
தீபாவளி பண்டிகை நேரங்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என்று கட்டாயமாக அறிவுறுத்தப்படுகிறது. ரயில் பெட்டிகளில் அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ரயில் பெட்டிகளில் பேண்ட்ரி கார்களில் தவிர பயணிகள் பயணிக்கும் பெட்டிகளில் கேஸ் சிலிண்டர்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் கேஸ் சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளனர்.இது எங்கே எப்படி கொண்டு வந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. பயணிகள் ஏறும் முன்னரே அவர்களின் உடமைகளை சோதனை செய்திருந்திருந்தால் அப்போதே பறிமுதல் செய்திருக்கலாம். ரயில் நிலைய அதிகாரிகளின் அலட்சியம், பயணிகளின் பொறுப்பின்மை போன்றவையே இதுபோல உயிரிழப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது.
இதுபோன்ற விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு நேரிட்ட பின்னரே ஆய்வுகள் செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதை விட வந்த பின்னர் ஆய்வு என்பதே இப்போது அதிகரித்து வருகிறது என்பது பயணிகள் நலச்சங்கத்தினரின் குற்றச்சாட்டாக உள்ளது.












Click it and Unblock the Notifications