உசிலம்பட்டியில் ஷாக்! 5 நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்.. பெற்றோர் தலைமறைவு.. பெண் சிசுக்கொலையா?
மதுரை: உசிலம்பட்டி அருகே ஐந்தே நாட்களே ஆன பெண் சிசு சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்றும் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உசிலம்பட்டி தம்பதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் விவசாயக் கூலி மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌசல்யா மீண்டும் கர்ப்பமானார்.

3ஆவது பெண் குழந்தை
கௌசல்யாவுக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே அருகிலுள்ள சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அவருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பிறந்த வெறும் 5 நாட்களிலேயே பெண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக டிச. 26ஆம் தேதி இரவு உயிரிழந்ததாகவும் இதை யாரிடமும் கூறாமல் வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மர்ம மரணம்
அப்பகுதியில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வாரவாரம் பரிசோதிக்க சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து இருந்து செவியிலர் வீடுவீடாக செல்வது வழக்கம். அப்படி சமீபத்தில் செவிலியர் தேவி புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டதாகவும் அதனால் பெற்றோரைக் குழந்தையைப் புதைத்து விட்டதாகவும் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

பெண் சிசு கொலையா
மேலும், முத்துப்பாண்டி வீடும் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த செவிலியர் தேவி, உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சேடபட்டி கிராம நிர்வாக அலுவலர் பிறந்த ஐந்து நாட்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பெண் சிசு கொலையா என்று போலீசார் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர் தலைமறைவு
விசாரணைக்காக போலீசார் சென்று பார்த்த போதும் முத்துப்பாண்டி வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் குழந்தையைப் புதைத்தாக கூறப்படும் இடத்தில் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் காந்தி முன்னிலையில் மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். புரத பரிசோதனை முடிவில் தான் பெண் சிசு இயற்கையாகவே இறந்ததா அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்பது குறித்துத் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

தொட்டில் குழந்தை திட்டம்
1980களில் மதுரை உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண் சிசுக்கொலை' என்ற கொடுமை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதனால் அங்கு ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. அப்போது தான் பெண் சிசு கொலையைத் தடுத்து நிறுத்த 'தொட்டில் குழந்தைகள் திட்டம்' என்ற அற்புத திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications