ஒரு விளம்பரம்.. இப்படியும் பப்ளிசிட்டி திருடன்.. சூரி வீட்டு கல்யாணத்தில் நகை திருடிய விக்னேஷ் யார்?
மதுரை: கடந்த வாரம் மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு நடந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில், கைதான இளைஞர் விளம்பர பிரியர் என்பதும், வேண்டுமென்றே நகையை திருடி மாட்டிக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
விக்னேஷின் வேலையே சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது , அங்கு நகையை திருடுவது பின்னர் போலீசில் மாட்டி சிறைக்கு செல்வது அதன்பின்னர் அவரை பற்றி ஊடகங்களில் வரும் செய்தியை சமுக வலைதளங்களில் பரப்பி விளம்பரம் தேடுவது என வித்தியாசமானவராக இருக்கிறார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

விக்னேஷ்
சூரி வீட்டில் நகை திருடி மாட்டிய விக்னேஷ் குறித்து போலீசார் கூறும் போது, "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நகை கடை வைத்திருக்கும் மணிவாசகம் என்பவரது மகன் தான் விக்னேஷ். பட்டப்படிப்பு படித்துள்ள விக்னேஷ் விளம்பர பிரியர். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கி பழகுவாராம். அத்துடன் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.

மதுரை அதிகாரி வீடு
குறிப்பாக விக்னேஷ் பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் அழைக்காமலேயே பங்கேற்று வந்திருக்கிறார். அப்படி பங்கேற்கும் விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி தாமாகவே மாட்டி கொள்வார். அப்படித்தான் அண்மையில் மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் விக்னேஷ் கலந்து கொண்டிருக்கிறார்.

புகைப்படம் பதிவு
அவரது மகள் கழுத்தில் இருந்த வைர நெக்லஸை திருடிச் சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினரால் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே வெளியே வந்த பின்னர் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் தன்னை பற்றி திருட்டு சம்பந்தபட்ட செய்திகளை சேகரித்து விளம்பரத்திற்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்திக் கொள்வார். அப்படித்தான் நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாகத் தொடர்பில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

சுயவிளம்பரம்
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில் 10 சவரன் நகையைதிருடிய விக்னேஷை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நகையைத் திருடியதை விக்னேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். விக்னேஷ் பொழுதுபோக்கிற்காகவும், தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது போலீசாரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காவல்துறை தகவல்
விக்னேஷ் அவ்வப்போது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து தனது அப்பாவிற்கு ஃபோன் செய்து செய்தித்தாளில் தன்னை காணவில்லை என புகைப்படத்துடன் விளம்பரம் கொடுக்க சொல்வதை வாடிக்கையாக கொண்டவராம். கிட்டத்தட்ட புத்திசுவாதீனம் இல்லாத அளவிற்கு நடந்து கொண்டு வந்திருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications