இந்த டிராமாலாம் எங்ககிட்ட வேணாம்.. தொட்டிலை ஆட்டி பிள்ளையை கிள்ளி.. ஓபிஎஸ் மீது அதிமுக மாஜி அட்டாக்!
மதுரை: தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுகிறார் ஓபிஎஸ். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளான தேவர் ஜெயந்தி நாளில், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, திரும்பும்போது அவருடைய வாகனம் மீது செருப்பு, கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, கிளம்பும்போது, அங்கிருந்த ஒரு தரப்பினர், சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, அதிமுகவுக்கு சொந்தமான தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் வங்கியில் இருந்து எடுத்து தேவர் நினைவிடத்திற்கு வழங்கி இருந்தனர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொன்னில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கக் கவசம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், "பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது எங்களுக்கு தெரியாது. ஊடகங்கள் வாயிலாகத் தான் பிரச்சனை தெரிய வந்துள்ளது. ஏதோ இரண்டு காவாலி பயலுகள் கல்லை விட்டு எறிந்திருப்பார்கள்.
பசும்பொன் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பு போல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை, முதலமைச்சர் சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு அங்கு இல்லை. பவுன்சர்களின் பாதுகாப்புடன் தான் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் கிராமத்திற்கு வந்தார். காவல்துறை திட்டமிட்டு எங்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் பேசும்போது, நான் ஏற்கெனவே சமூக வலைதளங்கள் மூலமாக அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் என்னும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தொந்தரவோ துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள். இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது" என்று கூறினார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், "ஓ.பன்னீர்செல்வம் ஏன் இரட்டை இடம் போடுகிறார். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுகிறார் ஓபிஎஸ். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. ஓபிஎஸ் ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்துள்ளார். வாகனத்தின் மீது யார் கல் எறிந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் மகாத்மா காந்தியை போல் ஓபிஎஸ்ஸை ஒப்பிட வேண்டாம். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த மாதிரி பல நீலி கண்ணீர் நாடகங்களை பலமுறை பார்த்து உள்ளோம். ஓபிஎஸ்ஸின் நாடகத்தை இனி யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications