திமுக அமைச்சர்களுக்கு "வாய்க்கொழுப்பு!" பாயும் செல்லூர் ராஜூ.. அப்படியே பிடிஆர் பக்கம் திரும்பி! பரபர
மதுரை: மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக அரசையும் திமுக அமைச்சர்களும் அதிமுகவில் இருந்து கடுமையாக விமர்சித்து வரும் தலைவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
இன்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசிய செல்லூர் ராஜூ, திமுக அமைச்சர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்து உள்ளார்.

செல்லூர் ராஜூ
மதுரை பரவையில் தொண்டு நிறுவனம் மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். தீபாவளி வர உள்ள நிலையில், விலை பல மடங்கு உயர்த்துவது நியாயமில்லை. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையேற்றம்
தீபாவளி வர உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். விழாக் காலங்கள் வருவதால் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கும் சிக்கல் எழாதவாறு ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இப்போது ஆம்னி பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளதால் அரசு சிறப்புப் பேருந்துகளையும் இயக்க வேண்டும்.

வாய்க்கொழுப்பு
இப்போது இருக்கும் தமிழக அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்துவிட்டது. அனைத்து அமைச்சர்களும் மக்கள் வரிப் பணத்தில் தானே சலுகைகளை அனுபவிக்கின்றனர். அமைச்சர்கள் செல்லும் கார் ஓசி, பணியாட்கள் ஓசி, தங்கும் வீடு ஓசி என அனைத்தும் ஓசி தானே. மக்கள் வரிப் பணத்தில் தான் அமைச்சர்களுக்கு எல்லாம் அனைத்தும் ஓசியாக வழங்கப்படுகிறது.

பெயரை மாற்றுங்கள்
ஆனால் திமுக அமைச்சர் ஒருவர் பெண்களைப் பார்த்து வாய்க் கொழுப்பாக 'ஓசி பயணம்' என்கிறார். இதன் காரணமாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என்று கூறாமல் விலையில்லா பொருட்கள் என்று பெயரிட்டு அழைத்தார். இதுபோன்ற பேச்சுகள் மீண்டும் எழாமல் இருக்க மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்பதை மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துகள் என மாற்ற வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரிகள்
அதிமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் யானைப் பாகன் போல் இருந்தனர். ஆனால், இப்போது அவர்களே குதிரை ஓட்டியாகச் செயல்படுகின்றனர். நல்ல மனிதாபிமானம் மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். இப்போது தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பலமடங்கு அதிகரித்து உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க முடியாமல் ஐஏஎஸ் அதிகாரிகளின் கைகளும் கட்டப்பட்டு உள்ளது. கடத்தல் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றார் முதல்வர். ஆனால் இதுவரை முதல்வர் அப்படி சர்வாதிகாரியாக மாறியதாகத் தெரியவில்லையே!

அமைச்சர் பிடிஆர்
மதுரை மேயர் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை. அவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அமைச்சர் பிடிஆர் சொல்வதைத் தான் செய்ய வேண்டும் என இருக்கிறார். முதலில் மதுரை மேயரை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்.. மதுரையில் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கி எதுவும் முறையாக நடைபெறவில்லை" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications