பாதயாத்திரையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாரா? ஓபிஎஸ்ஸை அழைத்தீர்களா? பாஜக அண்ணாமலை பதிலை பாருங்க
மதுரை: நாளை ராமேஸ்வரத்தில் நடைபெறும் பாதயாத்திரையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்பது குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறை பிரதமராக வேண்டும் என்ற இலக்கில் பாஜகவினர் இருக்கிறார்கள். இதற்காக அவ்வப்போது பாஜக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 3ஆவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகிகள் பல்வேறு வகைகளில் மோடியின் சாதனைகளை கொண்டு செல்கிறார்கள்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்குகிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இவர் பாதயாத்திரையை தொடங்குகிறார். செல்லும் இடமெல்லாம் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி குறித்தும் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்தும் விளக்குகிறார்.
மொத்தம் 110 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் 234 தொகுதிகளிலும் முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரையின் தொடக்கவிழாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பாதயாத்திரைக்கு தமிழக சேர்ந்த பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அது போல் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரையில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் மீண்டும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே விரிசல் இருப்பதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாதயாத்திரையின் போது 10 இடங்களில் பொதுக் கூட்டம் நடைபெறும். அந்த 10 இடங்களில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார். அது போல் ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு செய்த 9 ஆண்டுகால சாதனைகள் பட்டியலிடப்படும்.
அதிலும் புள்ளி விவரங்களுடன் பட்டியலிடப்படுகிறது. இது பொய்யாக வாய்ப்பு இல்லை. பாதயாத்திரையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வது குறித்து உறுதியாகவில்லை என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாதயாத்திரைக்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என கேட்டார். அதற்கு அண்ணாமலை நேரடியாக பதில் சொல்லாமல் தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் யாத்திரையில் பங்கேற்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications