தமிழகத்திற்கு ஒன்னும் செய்யவில்லையா?.. விவாதிக்க தயாரா?.. முதல்வருக்கு ப.சிதம்பரம் சவால்
மதுரை: சிவகங்கை மக்களவை தொகுதிக்கு செய்தது என்ன என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, 8 வழி சாலை திட்டம் குறித்து விவாதிக்க தயாரா என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு, நடிகர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சருக்கு, ப. சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். இதனால், இந்த தேர்தல் சவால் தேர்தலாக மாறியுள்ளது.
சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் எச். ராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சிவகங்கை தொகுதிக்கும் சரி, தமிழகத்திற்கும் சரி ப. சிதம்பரத்தால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

என்ன செய்தார் சிதம்பரம்?
ப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என்றும், ப.சிதம்பரம் பதவியில் இருந்த போதே மக்களுக்கு எதுவும் செய்யாதபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்துவிடப்போகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

திட்டங்கள் சாத்தியம்
இந்த நிலையில், மதுரையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தமிழில் வெளியிட்டு ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை அனைத்தும் சாத்தியம் உள்ள திட்டங்கள் என்றும் கூறினார் .

தீயாக பரவியுள்ளது
நடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது என்றும், காங்கிரஸ் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் தீயாக பரவி உள்ளதாக பேசினார்.

ஸ்டாலின் முதலமைச்சராவார்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் ப. சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications