Imaginary Ghost, Ridiculous! கோயில் இடத்தில் தீபமேற்ற தேவஸ்தானமே தடை கேட்டது வினோதம்! நீதிபதிகள்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா, தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகளை தவிர அனைத்து பகுதிகளும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தம் என்ற நிலையில் அந்த கோயிலுக்கு சொந்தமான ஒரு தீபத் தூணில் தீபம் ஏற்ற தடை கேட்டது வினோதமாக இருக்கிறது என மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை அதே நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயசந்திரன்,கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பு, தர்கா நிர்வாகம், கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை ஆஜராகி வாதிட்டிருந்தனர்.
இந்த வாதங்கள் எல்லாம் டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைந்தது. தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்றைய தினம் நீதிபதிகள் அமர்வு தங்கள் தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு சொல்வது நம்பத்தகுந்த காரணமாக இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் இம்ரானுல்லா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி என்ன சொன்னாரோ அதே காரணிகளை வைத்துத்தான் டிவிஷன் பென்ச்சும் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சிவில் நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது என்கிற ஒரு பிரச்சினையில் மலை மீது இருக்கும் தர்கா, தர்காவுக்கு செல்லும் படிக்கட்டுகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியிருந்தது.
அந்த தீர்ப்பு இறுதி நிலையை எட்டிவிட்டது. அதற்கு எதிராக மேல்முறையீட்டுக்கு யாரும் செல்லவில்லை. தர்காவும் தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகளும் தவிர அனைத்து இடங்களும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்கிற பட்சத்தில் தீபத் தூணும் தேவஸ்தானத்திற்கே சொந்தமானது என்பதால் அந்த இடத்தில் தீபம் ஏற்ற யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்றுதான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.
அதே கருத்தை இன்றைய தினம் இரு நீதிபதிகளான ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள். இரு நீதிபதிகளும் சொன்னது என்னவென்றால் சிவனின் மறுஉருவம்தான் இந்த தீபம். அதை மக்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எப்போதும் தீபமானது மலை உச்சிகளில் ஏற்றப்படுகிறது.
தற்போது திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோயில் தீபத் தூணில் ஏற்றுகிறோம் என்கிறார்கள்.
தங்களுக்கு சொந்தமான தீபத் தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானமே முன் வந்திருக்க வேண்டுமே தவிர, அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பது வினோதமாக உள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமிழக அரசு தரப்பிலும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் அந்த தீபத் தூணில் தீபமேற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடும் என்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள். இதற்கு எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை. அந்த மலையில் தர்கா தொடர்பான விழாக்களை இஸ்லாமிய சமூகத்தினர் அமைதியாக நடத்திக் கொள்ளலாம்.
அது போல் திருப்பரங்குன்றம் கோயில் செல்வோர் தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த இரு தரப்பினருமே தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். மாநில அரசு, தேவஸ்தானம், மதுரை மாவட்ட நிர்வாகத்தை கடுமையாக நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். தமிழக வக்ஃபு வாரியம் வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்புவதாக (mischievous) நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் அவர்களால் இயன்ற வாதங்களை முன் வைத்திருந்தனர். எனினும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஒரு தூணில் தீபமேற்ற தமிழக அரசே எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும் என்ற பாயிண்ட்டைதான் நீதிபதிகள் பிடித்தனர். மேலும் கோயில் இடத்தில் விளக்கேற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என தமிழக அரசு கூறியது அபத்தமானது (Ridiculous), பூச்சாண்டி (Imaginary Ghost) காட்டுவதை போன்று என்றும் அவர்கள் விமர்சித்திருந்தனர். இவ்வாறு இமானுல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications