வாத்தி கம்மிங்..! மதுரையில் கெத்து காட்டிய அழகிரி ஆதரவாளர்.. டெபாசிட் இழந்த திமுக கூட்டணி - அதிமுக
மதுரை : மதுரை மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகனுமான அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது போல மதுரை மாநகராட்சியையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 53.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மையான திமுக
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதுரையில் திமுக முன்னிலை பெற்றது. மதுரை மாநகராட்சி திமுக கைப்பற்றிய நிலையில், சர்ச்சைக்குள்ளான மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற பூத்தில் பாஜக ஹிஜாப் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அந்த வார்டில் பாஜக வேட்பாளர் 10 ஓட்டுகளை மற்றும் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மு.க.அழகிரி ஆதரவாளர்கள்
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தேர்தலில் நேரடியாக ஆதரவாளர்களை களமிறக்காத நிலையில் சுமார் 40-பேர் அவரது ஆதரவுடன் சுயேச்சைகள் போட்டி விட்டதாக கூறப்படுகிறது. திமுக அதிமுகவுக்கு இணையாக மதுரை மாநகராட்சியில் தீவிர களப்பணியாற்றி வந்த ஆதரவாளர்கள் தற்போது கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுயேட்சை வேட்பாளர் வெற்றி
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர். இதையடுத்து திமுக ஆதரவாளர்கள் இந்த வெற்றியை மதுரையில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications