மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! மத்திய அரசு அறிவிப்பு
மதுரை: மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலுர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுமார் 2015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைய இருந்தது. இதனை வெட்டி எடுக்கும் உரிமையை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றியிருந்தது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த நவ.7ம் தேதி வெளியாகியிருந்தது. அப்போது முதல் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது.

நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துக்கொண்டே சென்றது. போராட்ட களத்திற்கு சென்றிருந்த தமிழக அமைச்சர்கள், மக்களுக்கு ஆதரவாக அரசு நிற்கும் என்றும், நிச்சம் சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு போராடும் என்றும் கூறியிருந்தனர். மட்டுமல்லாது சுரங்கம் அமைய உள்ள இடம் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே சூழலியலாளர்களும் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
தவிர குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் சுரங்கம் அமைய உள்ள இடம் இருந்து வருகிறது.
இப்படி இருக்கையில்தான், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவ.29ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தர். ஒருபுறம் வலியுறுத்தல்களும், கடிதங்களும் மத்திய அரசுக்கு சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு வந்தது. அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மத்திய அரசின் அனுமதிக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். இவை இரண்டுமே ஒரு புள்ளியில் உச்சத்தை தொட்டன.
அது சட்டமன்றத்தில் தனி தீர்மானமாக உருவெடுத்தது. கடந்த டிச.9ம் தேதி சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக இயற்றப்பட்ட தனி தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தான் பதவியில் இருக்கும் வரையில் இத்திட்டத்தைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கான எந்த காரணமும் கிடையாது. ஒருவேளை அப்படி வந்தால் நான் முதல்வர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துக்கொள்கிறேன்” என்று உறுதியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை அரிட்டாப்பட்டி கிராம மக்களை அழைத்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்திருந்தார். அப்போது சுரங்க ஏலம் ரத்து செய்யப்படும் என அவர் வாய் மொழியாக கூறியிருந்தார். இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications