சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு! 9 போலீஸாருக்கும் கருணை கூடாது! மத்திய அரசு அனுப்பிய அறிக்கை
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 9 போலீஸ் அதிகாரிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மதுரை நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மின்னஞ்சல் பதில் மனுவில், குற்றவாளிகளுக்கு கருணையோ, பாரபட்சமோ கூடாதென அரசு வலியுறுத்தியுள்ளது.
2020 ஜூன் 19 அன்று, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ், ஊரடங்கை மீறிக் கடையைத் திறந்ததாக போலீஸாரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரையும் சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
தண்டனை விசாரணையில், சிபிஐயும், ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரும் இக்கொலையை "அரிதினும் அரிதான வழக்கு" எனக் கூறி தூக்கு தண்டனை கோரினர். குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு, திட்டமிட்ட கொலை அல்ல, திடீர் ஆத்திரத்தில் நடந்ததால் குறைந்தபட்ச தண்டனையே கேட்டது.
மத்திய அரசு தனது மனுவில், இது ஒரு "போலீஸ் காவல் மரணம்" எனக் குறிப்பிட்டு, பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளது. ஏப்ரல் 6-ல் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
தண்டனை விதிப்பது குறித்து நிலைப்பாட்டை தமிழக அரசு தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 30 ஆம் தேதியே இந்த 9 போலீஸாருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிப்பு என செய்தி வெளியானது. குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த தண்டனை விவரங்கள் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம் மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கேட்ட நிலையில் மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய அரசும், மாநில அரசும், குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கலாம் என்பதை அறிக்கையாக கோர்ட்டுக்கு அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications