மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு விவகாரம்.. அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை
Recommended Video

மதுரை: மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்தை திமுகவினர் எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2007ம் ஆண்டு மே 9ம் தேதி தினகரன் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் ஸ்டாலின், கனிமொழியை விட அழகிரிக்கு மிகக் குறைவான ஆதரவே உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அழகிரியின் ஆதரவாளர்கள் (திமுகவினர்) பொங்கி எழுந்தனர்.
மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்தை வெறித்தனமாக தாக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்துக் கொளுத்தி சூறையாடினர். மதுரையிலும் வன்முறை தலைவிரித்தாடி மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது.

உயிருடன் எரிப்பு
தினகரன் அலுவலகத்தில் திமுகவினர் தாக்குதலில் தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொடூரமாக தீவைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

17 பேர் மீது வழக்கு
இந்த வழக்கு தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும், ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த ராஜாராம் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் அட்டாக்பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்துசெய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக்கோரி சிபிஐ சார்பில் 2011-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரத்து
இந்த வழக்கு 8 ஆண்டாக நிலுவையில் உள்ள நிலையில் இதன் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 9 பேரையும் விடுவித்து கீழமை நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

தலா 5 லட்சம்
மேலும் அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கும் அரசு தலா ரூ 5 லட்சம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications