இன்னொருத்தர் மனைவியை கால்கேர்ள் என மார்பிங்! ஹைகோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மதுரை: சமூகவலைதளங்களில் பெண்களின் மார்பிங் படம் வெளியிடுவது சமூகத்துக்கு எதிரான குற்றம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தென்காசியை சேர்ந்த ஹஜ் முகமது. இவர் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மனுதாரர் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கும் புகார்தாரருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் மனுதாரர் இன்னொருவர் மனைவியின் படத்தை மார்பிங் செய்து, அவரை கால்கேர்ள் என அடையாளப்படுத்தி, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை அந்த தனிப்பட்ட பெண்ணுக்கு எதிரான குற்றமாக மட்டுமே கருத முடியாது.
ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றமாகும். மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றம், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வாய்ப்புள்ள குற்றமாக இருப்பதுடன், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றமாகவும் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications