“பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும்”.. மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் ஸ்டாலின்!
மதுரை: "கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்" என மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் 2வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், "திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் இருப்பது கருத்தியல் நட்பு. திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஆன உறவானது கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலாக தந்தை பெரியார் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்து தொடங்குகிறது. தன்னை கம்யூனிஸ்ட்டாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர் தலைவர் கலைஞர். என் பெயரும் ஸ்டாலின்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள், வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதற்காக தொடர்ந்து போராடுகிறோம். மாநில சுயாட்சி என்பதே திமுகவின் உயர் கொள்கை கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய அரசுக்கு அலர்ஜியாக உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநிலங்களில் சுயாட்சி இருக்கும்.
ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது; பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும். அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications