ஈபிஎஸ் டீம் போட்ட திட்டம் ‘பனால்’.. அப்ரூட்டாக கட் ஆன ‘மாஜி’ ஆபரேஷன்.. அதிர்ச்சி கொடுத்த அமமுக!
மதுரை : தென் மாவட்ட முக்கிய மாஜியின் பேச்சைக் கேட்டு, எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகாமல், வேதனையில் முடிந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள் தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தினர்.
தென் மாவட்டங்களில் தங்களது பலத்தைப் பெருக்க முட்டி மோதி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அமமுகவை சேர்ந்த செல்வாக்கான சில புள்ளிகளை குறி வைத்து வலை வீசியது.
ஈபிஎஸ் தரப்பின் டீல்களை எல்லாம் காது கொடுத்து கேட்ட தினகரனுக்கு நெருக்கமான நிர்வாகி, எல்லாமே ரெக்கார்டு ஆகுது, தலைவருக்கு அனுப்பவா எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அப்படியே பிளானை டிராப் செய்துவிட்டதாம் ஈபிஎஸ் அணி மாஜி தரப்பு. இதுதான் தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கிறது.

தொடர் தோல்வி
அதிமுகவில் தொடர்ந்து நிலவி வரும் குழப்பச் சூழலுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து, விரைவில் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். அதேநேரம், கடந்த சில வாரங்களாக, குறிப்பாக சுப்ரீம் கோர்ட் அதிமுக பொதுக்குழு வழக்கை தள்ளி வைத்தது முதல், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரிய பிடி கிடைக்கவில்லை. தென் மாவட்டத்தில் ஓபிஎஸ் செல்வாக்கைச் சரிக்க எடுத்த முயற்சிகளும் பலன் தரவில்லை என்பதால் அப்செட்டில் இருந்து வந்தார் ஈபிஎஸ்.

டிடிவி தினகரன்
இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள அமுமுக நிர்வாகிகள், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக ஒரு தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லப்பட்டது. டிடிவி தினகரன், கட்சி செலவுகளை தங்கள் தலையிலேயே கட்டுகிறார் என்றும், சமீப காலமாக எந்தவொரு கூட்டத்திற்கும் செலவழிக்க பணம் கொடுப்பதில்லை என்றும் அமமுகவின் தென் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக பேச்சு அடிபட்டது.

மாஜி மூலம் ஈபிஎஸ் காதுக்கு
தென் மண்டல அதிமுகவின் முகமாக முன்னிறுத்தப்பட்ட அந்த மாஜி மூலம் இந்த தகவல் எடப்பாடி கவனத்துக்குச் சென்றது. இதுகுறித்த ஆலோசனையில், இந்த நேரத்தில் நாம் கொஞ்சம் இறக்கினால், அவர்களை வளைத்து விடலாம், தென் மாவட்டங்களில் நமது பலமும் பெருகும் எனக் கூறியுள்ளனர். ஆனால், எடப்பாடி கொஞ்சம் யோசித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் தூக்க முடியுமா என்று பாருங்கள், தினகரனுடன் மல்லுக்கட்ட வேண்டாமே எனக் கூறியதாகத் தெரிகிறது.

ஆபரேஷன் அமமுக
ஆனால், தென் மண்டல மாஜிக்கள், நல்ல செல்வாக்கு உள்ள புள்ளிகள் அவர்கள், வேறு பக்கம் செல்வதற்கு முன்பு நாமே முந்திக்கொள்வது நல்லது. தினகரன் கட்சியில் இருந்து நம் பக்கம் கொண்டு வருவதும், ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் தருவது போலத்தான் என்றெல்லாம் கூறி ஈபிஎஸ்ஸை சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எடப்பாடி கண்ணைக் காட்டவும், அவரது தரப்பு 'ஆபரேஷன் அமமுக' திட்டத்தை கையில் எடுத்தது.

தூண்டில்
இதனையடுத்து ஈபிஎஸ் அணியின் முக்கிய மாஜி தரப்பிலிருந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவின் முக்கிய நிர்வாகியிடம் பேசியுள்ளனர். அவரிடம் எடப்பாடியார் உங்கள் மீது தனி பாசம் வைத்திருக்கிறார், உங்களைப் போன்றவர்கள் சென்று விட்டதால் தான் அதிமுகவின் வளர்ச்சி தென் மாவட்டங்களில் தடை பட்டு விட்டதாக வருத்தப்படுகிறார். இங்கு வந்துவிடுங்கள், அங்கு வகிக்கும் பதவிக்கு நிகரான பொறுப்பையே எடப்பாடியார் தர தயாராக இருக்கிறார் என பெரிய தூண்டில் போட்டுள்ளனர்.

அப்ரூட்டாக
அமமுக நிர்வாகி எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்கவே, கொஞ்சம் முன்னேறிய மாஜி தரப்பு, எப்போ சந்திக்கலாம்? நீங்க எப்ப வேணாலும் வந்துடுங்க.. ஏற்பாடுகளை செஞ்சிடலாம் எனக் கூறியுள்ளனர். அதற்கு அமமுக நிர்வாகி நாம போனில் பேசுவது எல்லாமே ரெக்கார்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் தலைவருக்கு அனுப்பவா? என்று கேட்டதால், உடனே ஆடிப்போன மாஜி தரப்பு போனை அப்ரூட்டாக கட் செய்து விட்டதாம். இதையடுத்து, போட்ட பிளான் ஃபெயிலியர் ஆன விரக்தியில் இருக்கிறதாம் ஈபிஎஸ்ஸின் தென்னக டீம்.

ஈபிஎஸ் அப்செட்
இதையும் அறிந்து தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற எடுத்து வரும் முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிவது பற்றி கவலையில் ஆழ்ந்துள்ளாராம் ஈபிஎஸ். மதுரை மாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தது அணிக்குள்ளேயே சில சலசலப்புகளை ஏற்படுத்தியதும், தற்போதைய பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்குமா என்றும் விசாரித்து வருகிறாராம். ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அதைத் தீர்த்துவிட வேண்டும் என்றும் ஆலோசனையில் இறங்கி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications