அதிமுக பொதுச்செயலாளரா அல்லது தலைவரா? எடப்பாடி பழனிசாமி சொன்ன 'அந்த' பதில்!
அதிமுகவின் தலைவரா அல்லது பொதுச்செயலாளரா என்ற கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
மதுரை: அதிமுகவின் பொதுச்செயலாளரா அல்லது தலைவரா என்ற எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளர் என்று பதில் அளித்துள்ளார். அதேபோல், ஓபிஎஸ் அணியில் உள்ள ஒரு சிலரை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிமுக உற்சாகம்
இந்த தீர்ப்பின் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியும் உற்சாகமாகியுள்ளார். மதுரையில் ஆர்பி உதயகுமார் மகள் திருமண விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பால் கிடைத்த உற்சாகத்தில் மதுரையையும், அதிமுகவின் முன்னாள் தலைவர்களையும் புகழ்ந்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப் போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும்.

அழைப்பு
ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம். இனி அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார். இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. ஆட்சி நீடிக்குமா என்ற கணிப்புகளை பொய்யாக்கி நான்கரை ஆண்டுகள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். எதிர்காலத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

திமுகவுக்கு பயம்
தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. இதனால் தான் வாக்காளர்களை அடைத்து வைக்கின்றனர். இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. அதிமுக வலுவாக உள்ளது. இனிமேல் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். சிறப்பாக பணியாற்றி, மீண்டும் நல் ஆட்சியை கொடுப்போம் என்று கூறினார்.

பொதுச்செயலாளர்
பின்னர் அதிமுகவின் தலைவரா அல்லது பொதுச்செயலாளரா என்ற கேள்விக்கு, நான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளர் என்று பதிலளித்தார். இதன் மூலம் விரைவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications