அதிமுகவின் பிளவு.. தேர்தல் தோல்விக்கு பின் எடப்பாடி பழனிசாமி உணர்வார்.. மருது அழகுராஜ் நச் பதில்!
மதுரை: இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் உரிமை இன்னமும் ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டும் தான் உள்ளது என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரத்தில் சிக்கியுள்ளதால், திமுகவின் பீ டீமான எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக இருந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் அதிமுக பிரியும் போது திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், இம்முறை அதிகமான பிளவுகள் இருப்பதால் மீண்டும் அதிமுக தோல்வியை சந்திக்கும் என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பெரும்பான்மை நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், தென் பகுதியில் உள்ள அதிமுகவினர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் ஓபிஎஸ் தரப்பில் நடத்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின், ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறுகையில், அதிமுக தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் அல்ல.

ஓபிஎஸ்-க்கு பலன்
எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி பலன் அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலகும் முடிவை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகித்து அவரை அவமதித்து வருகிறார் ஜெயக்குமார்.

இபிஎஸ் மீது விமர்சனம்
பாஜகவுக்கு எதிராக சிவி சண்முகத்தை பேச சொன்னவர் எடப்பாடி பழனிசாமி தான். ஓ.பன்னீர்செல்வத்தை அரசியல் போலி என நத்தம் விஸ்வநாதன் சொல்வது உண்மை என்றால் அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வது போல தான். ஜெயலலிதாவை நீக்கியவர்கள் இப்போது அவரது நியமனங்களையும் இழித்து பேசுகின்றனர். யார் அரசியல் போலி என்ன என்பது பிரதமருக்கு கூட தெரியும். நத்தம் விஸ்வநாதன் மனநலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேற்று வரை அண்ணன் என்று சொல்லி விட்டு இன்று போலி என்கிறார்.

கூவத்தூர்
இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் உரிமை இன்னமும் ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டும் தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தலைமை கழகம். அது சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவர் தான் அவர். கூவத்தூரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

கொடநாடு விவகாரம்
எடப்பாடி பழனிச்சாமி மேல் உள்ள நம்பிக்கையில் தான் திமுக உள்ளது. அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கண்ணால் பார்த்து சாட்சியான கிருஷ்ண பகதூரும் கொல்லப்பட்டுவிட்டார் என்றே தெரிகிறது. இந்த வழக்கில் திமுகவின் பிடியின் சிக்கிக் கொண்டு திமுகவுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உதவுகிறார்.

அதிமுகவின் பிளவு
ஓபிஎஸை திமுகவின் பி டீம் என சொல்கின்றனர். உண்மையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர் எடப்பாடி பழனிசாமி. அவர் தான் திமுகவின் உண்மையான பி டீம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் கூட்டணி அமையும். அவர்தான் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கைக்கு உரியவர். டிடிவி தினகரன் பிளவால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது. இப்போது அதிகமான பிளவுகள் உள்ளதால் தேர்தலில் அதிமுக தோற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்தால் தான் எடப்பாடி பழனிசாமி பாதிப்பை உணர்வார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications