ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக... மதுரை மாவட்ட எஸ்பி காரிலேயே சோதனை!
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காரிலேயே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக எஸ்பி மணிவண்ணன் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியூரில் தாசில்தார் சீதாலட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் எஸ்பி மணிவண்ணனின் காரையும் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் காரில் சோதனை நடத்த மணிவண்ணன் ஒத்துழைத்தார். சிறிது நேரம் காரை சோதனை நடத்திய அதிகாரிகள், காரில் எதுவும் இல்லை என்று கூறினர். இதையடுத்து அவர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இதேபோன்று மேமடை பகுதியில் பறக்கும் படையினர் எஸ்பி மணிவண்ணன் காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதற்கு அவர் மறுப்பு சொல்லமால் முழு ஒத்துழைப்பு அளித்தார்.
போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்பியின் காரிலேயே பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications