எனக்கும் மனவருத்தம்.. பொதுவெளியில் சொல்ல கூடாது.. எடப்பாடியிடம் நேரடியாக முறையிடணும்.. செல்லூர் ராஜு
மதுரை: ஒரு கட்சியில் மன வருத்தங்கள் இருந்தால், அதனை பொதுச்செயலாளரிடம் மட்டுமே சொல்ல வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று செயல்பட்டதே செங்கோட்டையன் தான் என்று கூறிய அவர், இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவரான செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறி வந்த செங்கோட்டையன், திடீரென ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன்பின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமியின் செயல் தொடர்பாக பேசி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவிலும் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்க மாட்டார்கள். சிலருக்கு ஈகோ பிரச்சனை கூட இருக்கும்.
அவர்களை வைத்துக் கொண்டு திமுக ஆட்சியின் அவலங்களை மறைத்து வருகிறது. ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையே பிடிக்காதா என்று எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசக் கூடாது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வர அனைவரும் பாடுபட்டோம். ஒற்றைத் தலைமை என்ற கோஷம் எழுந்த போது, கைதூக்கி ஆதரவு அளித்தது செங்கோட்டையன் தான்.
அப்போது திடீரென என்ன ஆகிவிட்டது அவருக்கு.. எடப்பாடி பழனிசாமி எது சரியோ அதனை செய்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் இல்லாமல், தன்னுடைய நோக்கத்தை செயல்படுத்த முனைந்ததால், செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிய பலருக்கும் பதவி அளிக்கப்பட்டுள்ளது. எனக்கும் கூட பல வருத்தம் இருக்கும். அதனை ஊடகத்திடம் சொல்லக் கூடாது.
பொதுச்செயலாளரிடம் நேரடியாக முறையிட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவே செய்கிறோம். மதுரை மேற்கு தொகுதியை பொறுத்தவரை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. மக்களுக்கு யார் சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications