"கொலைகாரன் கூட இப்படி தாக்க மாட்டான்.." திருப்புவனம் லாக்கப் மரணம்.. ஐகோர்ட் மதுரை அமர்வு காட்டம்
மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய தாக்குதலில் இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் மதுரை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்த ஐகோர்ட் நீதிபதிகள், கொலைகாரர்கள் கூட இதுபோல தாக்க மாட்டார்கள் என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அஜித் குமார் என்ற இளைஞரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் அந்த இளைஞரை அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. போலீஸ் தாக்குதலில் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

5 பேர் கைது
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் இதுவரை ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் மதுரை அமர்வில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதிகள் சில காட்டமான கருத்துகளைக் கூறினர்.. மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8ம் தேதிக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணைக்கு உதவும் வகையில் சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்கத் தமிழ்நாடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலைகாரன் கூட இப்படி அடிக்க மாட்டான்
ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் மேலும், "அஜித் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உயிரிழந்துள்ளார். ஒரு கொலைகாரன் கூட இப்படித் தாக்க மாட்டான் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று குறிப்பிட்டனர். மேலும், "சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. புலனாய்வு அதிகாரி அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கவில்லை" என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாடு போன்ற கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் இதுபோல நடப்பது ஆபத்தானது என்று கூறிய உயர் நீதிமன்றம், மூத்த அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை
முன்னதாக இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் மதுரை அமர்வும் சிபிசிஐடி தொடர்ந்து விசாரிப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றே கூறியிருந்தது. இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டது.
ஸ்டாலின்
மேலும், உயிரிழந்த அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரரை முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணையில் எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. காவல்துறையினர் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு சிலரின் இந்தச் செயல் மன்னிக்க முடியாதது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications