வரும் தேர்தலில் மக்கள் திமுகவை தள்ளுபடி செய்வாங்க! மொத்த கோபத்தையும் கொட்டிய ஆர்.பி.உதயகுமார்!
மதுரை: மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்த பல லட்சம் பெண்களின் மனுக்களை திமுக அரசு தள்ளுபடி செய்துவிட்டதால், வரும் தேர்தலில் திமுகவை அவர்கள் தள்ளுபடி செய்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை தமக்கு மாற்றிக் கொடுக்கப்படாத ஆத்திரத்தில் உள்ள ஆர்.பி.உதயகுமார், திமுக மீது கடுமையான முறையில் அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளார். வாக்குறுதி விவகாரத்தில் கருணாநிதியும் சொன்னதை செய்யமாட்டார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
பொதுவாகவே ஆர்.பி.உதயகுமாரை பொறுத்தவரை கழுவுகிற மீனில் நழுவுகிற மீனை போல் யாரை பற்றியும் பட்டும் படாமலும் தான் விமர்சிப்பார். ஆனால் இப்போது திமுக மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைக்க ஆரம்பித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முறைப்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டு அது குறித்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியும், இருக்கை விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததே அவரது இந்த கோபத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் திட்டம் என்பது குளறுபடியின் மொத்த உருவமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கான மனுக்களை தள்ளுபடி செய்து லட்சக்கணக்கான மகளிரை திமுக ஏமாற்றிவிட்டதாகவும் சாடினார். கையில் மனுக்களுடன் பெண்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று பார்த்தால் இது தெரியும் எனவும் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத் திட்டத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை பல லட்சம் இருப்பதால் நிராகரிக்கப்பட்டவர்களின் வாக்குகளை ஈர்க்க அதிமுக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.












Click it and Unblock the Notifications