கதாநாயகன், இயக்குநர் ஏன் அமைதியாக இருந்தாங்க.. கௌரி கிஷன் விவகாரத்தில் சரத்குமார் கொதிப்பு
மதுரை: பட விழாவில் நடிகை கௌரி கிஷ்னிடம் யூடியூபர் ஒருவர் அறுவறுக்கத்தக்க வகையில் கேள்வி கேட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. திரைத்துறையினர், பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் நடிகையிடம் கேள்வி கேட்டபோது உடன் இருந்த கதாநாயகன், இயக்குநர் உள்ளிட்டோர் அதைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," நடிகர் சங்கம் முன்னாள் நிர்வாகியாக இல்லாமல் ஒரு ஆண் மகனாக சொல்கிறேன். என்னை பொறுத்தவரை கௌரி கிஷ்னிடம் அந்தக் கேள்வியை கேட்டிருக்கவே கூடாது. அந்தப் பட விழாவில் தான் அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பொதுவாக பட விழாவில் அந்தப் படத்தின் என்ன கேரக்டர் செய்துள்ளீர்கள்.

ஆண் மகனுக்கு அழகல்ல
படம் நன்றாக வந்துள்ளதா, இந்தப் படம் எப்படி இருக்கும் அல்லது படத்தின் இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட குழுவினர் பற்றி கேள்வி கேட்டிருக்கலாம். அதைவிட்டு நடிகையின் எடை என்பது கேட்பது தவறு. அதை பத்திரிகையாளர் சங்கமே கண்டித்துள்ளது. சக நடிகையிடம் இப்படி கேள்வி கேட்கும்போது, அவருடன் இருந்த கதாநாயகன், இயக்குநர் தைரியமாக கேள்வி கேட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது வருத்தமளிக்கிறது.
தவறு நடக்கும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்பது ஆண் மகனுக்கு அழகு. அப்படி செய்யாதது வருத்தமளிக்கிறது. கோவை மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகளை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறு நடந்தால் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை சொல்வது இயல்பு.
விஜய் கட்சி
SIR தீர ஆராய்ந்து செய்யப்படும் நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கை மட்டுமே. அது தவறு கிடையாது நல்லது தான். 2026 தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி என்று விஜய் அழுத்தி சொல்வது ஏன் என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக பிடிக்கவில்லை என்பதால் டி.டி.வி தினகரனும் அப்படி சொல்வார்.
இன்றைக்கு ஆரம்பித்த கட்சியை பெரிதாக பேசுவது அவருக்கு தான் அவலம். 2026 தேர்தலில் என்ன நடக்க போகிறது என்று யாருக்கும் தெரியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதில் நான் கருத்து சொல்லும் இடத்தில் இல்லை. எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர் இருக்கின்றனர். கூட்டணி உருவாவது, பலமாக்குவதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக பணியாற்றுவது எங்களின் கடமை." என்றார்.












Click it and Unblock the Notifications