வணக்கம் டீச்சர்.. இந்த வீடியோவை பார்க்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்.. மதுரை டிரைவர் உருக்கம்
மதுரை: மதுரையில் அரசு பஸ் டிரைவர் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு விட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சாகும் முன்பு வீடியோ வெளியிட்ட அவர் எதற்காக அப்படி செய்தார்.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மதுரை மாவட்டம் கே.பாறைப்பட்டியை சேர்ந்த 54 வயதாகும் வெங்கடேசன் என்பவர் பல வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி. வெங்கடேசன் வசந்தி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன் மதுரை அருகே மேலக்குயில்குடி கவிக்குயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வசந்தி ஒரு ஆசிரியை ஆவர். இவர் மதுரை அருகே செல்லம்பட்டி ஒன்றிய அரசு பள்ளியில் வசந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன் அடிக்கடி கடன் வாங்கி செலவு செய்தாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறதாம். இதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த வசந்தி, கணவர் வெங்கடேசனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேசன், கடந்த ஒரு மாதமாக விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டுக்கு வந்த மகன், தந்தை தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தாய் மற்றும் தாத்தாவுக்கு உடனே தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வெங்கடேசன் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக வெங்கடேசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், வணக்கம் டீச்சர் , இந்த வீடியோவை நீங்கள் பார்ப்பதற்குள் நான் உயிருடன் இருக்கமாட்டேன். என் உடலை என்னுடைய அப்பா மற்றும் அக்காளிடம் ஒப்படைத்து சொந்த ஊரான பாறைப்பட்டிக்கு கொண்டு செல்லுங்கள். நான் பலரிடம் கடன் வாங்குவதாக என் மனைவி கூறியுள்ளார். ஆனால் நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை.
நான் மிகவும் நேசித்த மனைவி விவாகரத்து கேட்டதால், நான் இந்த முடிவை எடுக்கிறேன். நான் வாழ தகுதியில்லாதவன். இவ்வாறு அந்த வீடியோவில் டிரைவர் வெங்கடேசன் உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். டிரைவர் வெங்கடேசன் வெளியிட்ட வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications