ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது.. ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் "ராமேஸ்வரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீனவ தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாத சாமி கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருகின்றனர்.
புண்ணிய தலமாக கருதி மக்கள் ராமேஸ்வரதிற்கு வருகை புரிகிறார்கள். தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ரமேஸ்வரம் தீவின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும்.
னவே ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்க கூடாது என கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமையவுள்ள அரசு டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என மனுதாரரின் மனுவை ஏற்று, டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.