உங்க விளம்பரத்துக்கு கோர்ட் தான் கிடைச்சதா? பொது நல வழக்கு தொடர்வோருக்கு நீதிபதிகள் கடும் வார்னிங்!
மதுரை: முறையான ஆதாரங்களுடன் உரிய விவரங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் நெல்லை மாவட்டம் களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம், சேரன்மாதேவி ரயில் நிலையம், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முதல் கன்னடியன் கால்வாய் பாலம் வரை மற்றும் அம்பாசமுத்திரம் வளைவு முதல் அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் முறையாக இல்லாமல் பொதுப்படையாக இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அவரது புகார் குறித்த முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என வாதம் வைத்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், பொது நல மனுக்களை விளம்பரத்துக்காக தாக்கல் செய்யக்கூடாது. பொது நல மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும். வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன், தொடர்புடைய அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆதாரங்கள், புள்ளி விபரங்களுடன் பொதுநல மனு தாக்கல் செய்யலாம். போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications