மதுரையில் கனமழை.. ரயில்வே தரைப்பாலத்தில் அடித்து செல்லபட்ட கார்.. 3 பேர் பத்திரமாக மீட்பு
மதுரை: மதுரையில் இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 6 மணி நேரம் ரயில்வே தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து 3 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. சென்னையில் கடுமையான வெயில் மற்றும் திடீரென வானிலை மாறி பரவலாக மழை பெய்து வருகிறது.

தென் தமிழகம், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதிலும் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கிறது.
இன்று தமிழ்நாட்டின் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருப்பூர், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு மதுரையில் பலத்த மழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். குறிப்பாக மதுரை மணி நகரம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில், காவல்துறை வாகனம் ஒன்றும் காரும் சிக்கிக் கொண்டது.
இந்த வாகனங்களில் சிக்கிய 3 பேரை பத்திரமாக போலீசார் மீட்டனர். ரயில்வே பாலத்தில் சுமார் 6 மணி நேரம் வெள்ளம் தேங்கியிருந்தது. மதுரை மட்டும் இன்றி புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டையில் பல இடங்களில் தாழ்வான சாலைகள், பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள நீரில் சிக்கிய ஆட்டோ ஒன்றில் இருந்து பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications