நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட விதித்த தடையை மீறுவது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள ஊரணியில் ரூ.40 லட்சம் செலவில் மாத்தூர் ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. நீர்நிலைகளில் எவ்வித கட்டிடங்களும் கட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி கட்டடம் கட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட விதித்த தடையை மீறுவது ஏன்? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் சத்திரம் ஊருணி அமைந்திருக்கிறது. இந்த சத்திரம் ஊருணியில் ரூ.40 லட்சம் செலவில் மாத்தூர் ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுகிறார்கள். நீர்நிலைகளில் எவ்வித கட்டிடங்களும் கட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் சத்திரம் ஊருணியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட அனுமதி வழங்கியது சட்டவிரோதம் ஆகும்.

எனவே ஊருணியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தடை விதிக்க வேண்டும்.. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கட்டுமான பணிக்காக செலவிட்ட பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்..இவ்வாறு மனுவில் காசிராஜன் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியம் ஆஜராகினார். அவர் வாதிடும்போது, நீர் நிலைகளில் எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஊருணிக்குள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஊருணி கரையிலும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள், ஊருணிக்குள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் நீர் நிலைகளில் கட்டிடம் கட்ட தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியது எப்போது? அது மீறப்பட்டுள்ளது ஏன்? என்பது பற்றி தமிழக அரசு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற மார்ச் 6-ந் தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications