அமலாக்கத்துறையிலேயே லஞ்சம்.. பொறுக்கவே முடியாது.. அங்கித் திவாரி வழக்கில் வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!
மதுரை: சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனக் கூறி, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது ஐகோர்ட் மதுரை கிளை.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தள்ளுபடியானது.

இந்நிலையில், அங்கித் திவாரி உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், 'கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீண்ட நாள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவேன்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் வாதிடுகையில், அங்கித் திவாரி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது சட்டவிரோதம். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கை நீர்த்துப்போக செய்துவிடுவார் என்றார்.
இந்நிலையில், அங்கித் திவாரி ஜாமீன் வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்பதால் இந்த வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும், வேறு நீதிபதி முன்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறும் நீதிபதி விவேக் குமார் சிங் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு, இன்று நீதிபதி தண்டபாணி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது ஐகோர்ட் கிளை.
மேலும், சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டுகளில் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை எவ்வகையிலும் ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications