சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. எஸ்.பி வருண்குமார் புகாரில் பதிவான வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி!
மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி வருண்குமார் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியது தொடா்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண் குமாரை விமர்சித்துப் பேசி இருந்தார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டார் நீதிபதி பரத சக்கரவர்த்தி. திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்து சமூக வலைதளம் உள்பட எந்த இடத்திலும் தவறாகப் பதிவிடவில்லை என சாட்டை துரைமுருகன் தரப்பு தெரிவித்ததையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
மேலும், திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மிகவும் அருவருக்கத்த வார்த்தைகளை பேசியுள்ளது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். எஸ்.பி மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications